Monday, November 22, 2010

ஸ்ரீ மத் பாகவத கதைகள - பாகம் 2

"ஒரு தத்துவ தரிசனம்" என்ற பெயரில், இதற்கு முன்னரே ஸ்ரீ மத் பாகவத கதைகளை வைத்து ஒரு பதிவை பகிர்வு செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.இந்த முதல் பதிவை படிக்காதவர்கள், கீழ் குறிப்பிட்ட வலை முகவரியை சொடுக்கி, வேண்டுமானால் படித்து கொள்ளலாம்.

ஒரு தத்துவ தரிசனம் - ஸ்ரீ மத் பாகவத கதைகள்



இவ்வாறு கதைகள் என்பவைகள், நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு அப்படியே சொல்லும் வரலாற்று பெட்டகங்களாக எனக்கு தோன்றவில்லை. அவைகள், அதன் கர்த்தாக்கள் நமக்கு சொல்ல வந்த கருத்தை சில சம்பவங்கள் மூலம் (கற்பனையாக கூட இருக்கலாம்), விரிவாக விளக்கும் ஒரு கலை எனலாம்.

"புரஞ்சனோ பாக்யானம்" மற்றும் "கஜேந்திர மோக்ஷம்" என்ற இரு பாகவத கதைகளை தொடர்ந்து, "அமிர்தம் கடைதல்" என்ற பாகவத கதையையும் இந்த பதிவின் மூலம் பகிர நினைக்கிறேன். இனி அந்த கதையை பார்ப்போம்.

அமிர்தம் கடைதல் - கதை விளக்கம்

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக, பாற்கடலை கடைந்த இந்த கதை எல்லாருக்கும் பரிச்சயம் ஆன கதை என்றே நினைக்கிறேன். எனினும், இந்த கதையை விளக்கமாக பார்ப்போம்.

ஒரு காலத்தில் துர்வாசர் என்ற ஒரு முனிவர், தேவர்களின் அரசனான இந்திரனை பார்க்க இந்திரலோகம் வந்திருந்தார். அவர், இந்திரனை கௌரவிக்கும் பொருட்டு, சிறந்த மலர்களாலும், இலைகளாலும் ஆன ஒரு மாலையை இந்திரனுக்காக கொண்டு வந்து அதை அவனிடம் கொடுத்தார். முனிவரை மிகவும் அலட்சியமாக எண்ணிய இந்திரன், யானை மீது அமர்ந்து இருந்தவாறே அந்த மாலையை வாங்கி தன்னுடைய யானையின் அணிகலன் ஆக்கினார். அந்த யானை, அந்த மலர் மாலையை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்தது. இதை பார்த்து கொண்டு இருந்த முனிவர், "நான் கொடுத்த மாலையின் அருமை தெரியாமல் அதை தன் யானைக்கு கொடுத்து தனக்கு மிகப்பெரிய அவமரியாதை செய்து விட்டான், இந்திரன்" என கடுங்கோபம் கொண்டு தேவர்களுக்கு, அவர்களின் வலிமையும், அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம், தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். தேவர்கள் கை தாழும் போது, அசுரர்கள் கை ஓங்குவது இயற்கை தானே. அசுர தலைவன் "மஹா பலி" யின் படையெடுப்பில் தோற்று போனது தேவர்கள் படை. எல்லா அண்ட சராசரமும், அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது. அவர்களின்  பிடியில் இருந்த சாதாரண மக்கள், துயரங்களாகவே அனுபவித்து வந்தனர்.

தோற்று போன தேவர்கள், வைகுண்டத்தில் ஒன்று திரண்டு, பகவான் விஷ்ணுவை நோக்கி பிரார்த்திக்க ஆரம்பித்தனர். இவர்களின் வலிமையை மறுபடியும் மீட்டு கொண்டு வர, அமிர்தம் ஒன்றே வழியாக இருந்தது. விஷ்ணு பகவானும், அவர்களுக்கு அமிர்தத்தை பெற்று தர, உதவ முன்வந்தார்.

பாற்கடலுக்கு இடையே அமிர்தம் ஒளித்து வைக்க பட்டு இருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன. அமிர்தம் கிடைக்க வேண்டும் என்றால், பாற்கடலை கடைந்து தான் பெறமுடியும் என்று விஷ்ணு பகவான் கூற, அதற்கான முயற்சிகள் தொடங்கின. மிகப்பெரிய "மந்தார மலை", பாற்கடலுக்கு நடுவே வைக்க பட்டது. வாசுகி என்ற பாம்பு, மந்தார மலைக்கு நடுவே கட்டப்பட்டது. மலையும் தயார். கயிறும் தயார். ஆனால், பாற்கடலை கடைவதற்க்கான சக்தி, தற்சமயத்தில் தேவர்களிடம் இல்லை. எனவே இதற்கும் தேவர்கள், மீண்டும் பகவான் விஷ்ணுவையே நாடினர். விஷ்ணு, இதற்கு அருமையான ஒரு யோசனை சொன்னார். அவர் சொன்ன யோசனை என்னவென்றால், தேவர்கள், அசுரர்களின் துணை கொண்டு, பாற்கடலை கடையலாம் என்பதே.

ஆனால், "அசுரர்கள், தமக்கு பலன் இல்லாமல், எப்படி தேவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். எப்படியும், கிடைக்கும் அமிர்தத்தில் சரி பாதி தங்களுக்கும் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார்கள். அப்படி, அமிர்தம் அவர்களுடன் பகிரப்பட்டால், தேவர்களின் கதி, அதோகதி தான். தேவர்களின் குலம் அடியோடு நாசம் பெற்றுவிடும்". இது போன்ற சிந்தனைகள், தேவர்களுக்கு தோன்றலாயின. இதை, ஸ்ரீ மத் நாராயணனிடம் விவாதித்தனர். அதற்கு நாராயணனோ, "அது எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன். அவர்கள் சரி பாதி அமிர்தத்திற்கு கோரிக்கை வைத்தால், அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்" என்று பதில் அளித்தார். மீதி என்ன? எல்லா ஏற்பாடுகளும் தயார்.

தேவர்கள் ஒருபுறம். அசுரர்கள் ஒருபுறம். பாம்பின் தலை ஒருபுறம், பாம்பின் வால் ஒரு புறம். இப்போது புது குழப்பம்!. யார், பாம்பின் தலையை பிடித்து கடலை கடைவது? மற்றும் யார் பாம்பின், வாலை பிடித்து, கடலை கடைவது என்று. அசுரர்கள், பாம்பின் வாலை பிடித்து கடைவதற்கு தயாராக இல்லை. "பிருகு முனியின் பிள்ளைகள் நாங்கள், நாம் போய் பாம்பின் வாலை பிடிப்பதா?", என அசுரர்கள் குரல் எழுப்பினர். தேவர்கள், கொஞ்சம் அடங்கிப்போய், அவர்கள் வாலை பிடித்து கடைய முன் வந்தனர். இதில் குறிப்பு என்னவென்றால், தேவர்களும் "பிருகு" முனிவரின் பிள்ளைகள் என்பதே.

இவ்வாறு பாற்கடல் கடைய ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், மந்தார மலை, கடலுக்கு இடையில் நிலையாக நில்லாமல், அது நழுவி, கடலுக்கு அடியில் செல்ல ஆரம்பித்தது. இப்போது, பகவான் விஷ்ணு தன் மாயையின் துணையுடன் ஒரு ஆமையின் உருவம் கொண்டு அந்த மலையை தாங்கி பிடித்தார். இப்போது, பிரச்சினை இல்லாமல் கடல் கடைய ஆரம்பிக்கப்பட்டது. போக போக, மிக வேகமாக, கடல் கடையப்பட்டது. பாற்கடல் என்பது, அமிர்தத்தை மட்டும் தன் வசம் கொண்டதாக இல்லை. அது கடையப்படும் போது, ஏனைய சில பொருட்களும் வெளிவர தொடங்கின. முதலில், மிகவும் கொடிய விஷமான "ஆல கால விஷம்" வெளி வந்தது. மொத்தம் உள்ள, அனைத்து உலகங்களிலும் மிகவும் கொடிய விஷமான, இந்த விஷம், அதன் நெடி மூலமாகவே, எல்லோரையும் தாக்க ஆரம்பித்தது. தேவர்கள் பலர், இதில் மயக்கம் அடைந்தனர். மீண்டும், ஸ்ரீ மந் நாராயணனின் உதவியைதான் எல்லோரும் நாடினர். ஆனால், விஷ்ணுவோ, ஈஸ்வரனான சிவனிடம் உதவி கேட்கும்படி சொன்னார். சிவ பெருமானும், தேவர்களுக்கு உதவ முன்வந்தார். தேவர்களின் துன்பங்களை போக்க, சற்றும் யோசிக்காமல் சிவ பெருமான், அந்த ஆல கால விஷத்தை, தன் வாய் வழியே பருக ஆரம்பித்தார். பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்து பகுதியை பிடிக்க, அந்த விஷம் சிவபெருமானின் கழுத்துலேயே தங்கியது. எனவே தான், சிவபெருமான், "நஞ்சுண்டேஸ்வரர், நீலகண்டர்" என்று எல்லாம் அழைக்க படுகிறார். கொடிய விஷத்தின் கொடுமை மறைந்தது. இனி, ஐஸ்வர்யங்கள், கடலில் இருந்து வெளிப்பட தொடங்கின.

விஷத்துக்கு அடுத்த படியாக, "வருணி" பகவான் வெளியே வந்தார். அவர், "மது" போன்ற போதை பொருட்களுக்கு எல்லாம் அதிபதி ஆவார். இவரை தேவர்களுடன் இணைத்து கொண்டனர்.
அடுத்து, "உச்சிஷிரவாஸ்" என்ற 7 தலை குதிரை வெளிவந்தது.
அடுத்து, "கௌச்தூபா" என்ற உயர்ந்த அணிகலன் வெளி வந்தது. இந்த அணிகலன், விஷ்ணு பகவானால் அணியப்பட்டது.
அடுத்து, சந்திர பகவான் வெளியே வந்தார்.
அடுத்து, லக்ஷ்மி தேவி வெளியே வந்தார். அவர் கடலை விட்டு வெளியே வந்ததும், விஷ்ணு பகவானுக்கு மாலை அணிவித்து, அவருக்கு துணைவி ஆனார்.
அடுத்து, "ரம்பா", "மேனகா", "புஞ்சிகத்சலா" போன்ற அதிரூப சுந்தரிகளான, அப்சரஸ் தேவதைகள் வெளியே வந்தனர்.
அடுத்து, உலகத்துக்கே படி அளக்க கூடிய "காம தேனு" பசு வெளியே வந்தது.
அடுத்து,  "பரிஜத்" என்ற வாடாத, அழியாத, மணம் குறையாத பூக்களை வழங்கும் மரமும், "கற்பகவிருக்ஷம்" என்ற, கேட்டதை அள்ளித்தரும் மரமும் வந்தன.
அடுத்து, "ஐராவதம்" என்ற வெள்ளை யானை வந்தது.
கடைசியாக, "தன்வந்திரி" என்ற ஆரோக்யத்திற்கான பகவான், "அமிர்த குடுவை" யுடன் வெளியே வந்தார்.

அமிர்தம் கிடைத்து விட்டது. இனி, தேவர்களும், அசுரர்களும், அதை பருக வேண்டியதே பாக்கி. இப்போதும் கடும் சண்டை. யார் முதலில் பருகுவது என்று. விஷ்ணு பகவான் யோசித்தார். அவர் மிகவும் அழகிய "மோகினி" என்ற பெண் வடிவம் எடுத்து, அசுரர்கள் முன் நின்றார். அசுரர்கள், மோகினியின் அழகில் மயங்கி போனார்கள். இப்போது, அவர்களுக்கு அமிர்தம் கூட, பெரிய விசயமாக தெரியவில்லை. அவர்களின் நோக்கம், எப்படியும் மோகினியை அடைவது என்பது மட்டுமாகவே இருந்தது. அவர்கள் எல்லோரும், முதல் படியாக, மோகினியை அணுகி, "எங்களுக்கு அமிர்தம் சரியாக பகிர்ந்து கொடுப்பாயா?" என கேட்டனர். காத்து கொண்டு இருந்த மோகினியோ, சரி என்று உடனே ஒத்துக்கொண்டாள். மோகினி அசுரர்களை பார்த்து, "நீங்கள் மிகவும் பலசாலிகளாக இருக்குறீர்கள். ஆனால், பாவம், தேவர்கள் மெலிந்து கிடக்கின்றனர். எனவே, முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து விடலாம்" என கருத்து கூறினாள். அசுரர்களும் ஏற்றுக்கொள்ள, முதலில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்து, தேவர்களின் உள்ளே அமர்ந்து தானும் அமிர்தம் பருகி விட்டான், அசுரனான ராகு. இதை, சூரியனும், சந்திரனும் கண்டுபிடித்து, விஷ்ணுவிடம் கூறினார். உடனே, ராகுவின் தலையை, தன் சக்ரஆயுதத்தால், வெட்டி எறிந்தார். பின், மோகினி, தன் மாயையில், அசுரர்களுக்கு அமிர்தம் கொடுப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி, உண்மையில் அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்காமல் தடுத்தார்.

இவ்வாறு, அமிர்தம் கடையப்பட்டு, தேவர்கள் பலன் அடைந்தனர்.

அமிர்தம் கடைதல் - கதை அலசல்

இந்த கதையை கேட்கும் போது, எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அவை,
  • ஏன், அசுரர்கள் எப்போதும் தேவலோகத்தையே குறி வைத்து தாக்குகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஒரே தந்தை தான் என்றால், அவர்களுக்குள் ஏன் இவ்வளவு பகை மற்றும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?
  • தேவர்கள் நாராயணனிடம் வந்து வேண்டினால் மட்டுமே, அவர் உதவ முன் வருவது ஏன்?
  • ஏன், எல்லா கடவுள்களும், தேவர்களை மட்டுமே ஆதரிக்கிறது. "ராவணன், ஹிரண்ய கசிபு" போன்ற அசுரர்கள், கடுமையான தவம் செய்து மட்டுமே வரங்கள் வாங்கியவர்கள். அவர்களின் பக்திக்கு மெச்சியே, வரங்கள் அளிக்க பட்டு உள்ளதாக கதைகள் சொல்கின்றன. இப்படி, பக்தியில் தேவர்களை மிஞ்சும் அசுரர்களை, ஏன், விஷ்ணுவோ, சிவனோ அழிக்க நினைக்க வேண்டும்?
  • எப்போதும் அகங்காரம் கொண்டு தவறுகள் செய்யும், தேவர்களை மட்டும், ஏன் கடவுள் திருத்துவதே இல்லை? அவர்கள் மீது மட்டும் ஏன் இந்த கரிசனம்?
  • உண்மையில், இது போன்ற கதைகள், இன்றைய கால கட்டத்துக்கும் தேவை தானா? நாகரீகமான, இன்றைய கால கட்டத்திலும், தேவர்கள், அசுரர்கள் போன்ற கற்பனையான கதாபாத்திரங்களை முன்னிருத்தியே, நம்முடைய தலைமுறை கடவுள் கதைகளை புழங்க வேண்டுமா?
இந்த கேள்விகளில் சிறிது நாத்திகம் தென்பட்டாலும், இந்த கேள்விகள், பலருடைய மனதில் ஏற்பட்டு, வெளியே கேட்கப்படாமல் இருக்கலாம் என்றே கருதுகிறேன். குறிப்பாக, சிறுவர்களுக்கு இது போன்ற கதைகள் வெறுமனே திணிக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் அறிவு கேட்கும் கேள்விகள், பதில் அளிக்கப்படாமலேயே, அவர்களை கட்டாயமாக பக்திக்கு செலுத்துகிறோம் என்றே தோன்றியது. இந்த கேள்விகளுக்கு விடை காணும் முயற்சி, ஓரளவில் வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். இந்த கதை மற்றும் கேள்விகளுக்கான, வித்தியாசமான அலசலை இனி காண்போம்.

இந்த கதையில் வரும் எல்லா கதா பாத்திரங்களும், ஏதோ ஒரு உள் அர்த்தத்தை விளக்கும் பொருட்டே அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும், ஒரு உருவகம் என்றே நினைக்கிறேன். அதன் விளக்கங்கள்,

இந்திரன் - இந்திரியங்கள் (உடல் மற்றும் உறுப்புகள்)
தேவர்கள் - நல்ல பண்புகள்
அசுரர்கள் - கெட்ட பண்புகள்
துர்வாசரின் மாலை - சான்றோர்கள் கருத்து.
இந்திரனின் யானை - புலன்கள்
விஷ்ணு பகவான் - ஆத்மா
பாற்கடல் - மனது
பர்வத மலை மற்றும் வாசுகி பாம்பு - சாட்சி மாத்திரமாக, மனதை அலச உதவும் சாதனங்கள்.
ஆமை (கூர்மம்) - புலன்களை அடக்கும் யுக்தி
ஆல கால விஷம் - காம இச்சைகள்
சிவபெருமான் - குரு
மகாலட்சுமி - ஐஸ்வர்யம்(செல்வங்கள்) மற்றும் மகிழ்ச்சி
மோகினி - புலன் இன்ப விஷயம்
அமிர்தம் - முக்தி (சமாதி) நிலை.

எப்போது எல்லாம், துர்வாசர் போன்ற சான்றோர்களின் சொல்படி கேளாது, அவர்கள் நமக்கு அளிக்கும் மலர்மாலை போன்ற அறிவு புகட்டும் சான்றுகளை, நம் மனம் மற்றும் உடல்(இந்திரன்) புறக்கணிக்கிறதோ, அப்போது, அது தன் நிலை தாழ்ந்து கீழான நிலையை அடைகிறது. தன் உண்மையான பலம் தெரியாது, மிகவும் பலவீனம் அடைகிறது. தனக்கு எதனால் இந்த பலவீனம் என தன்னை(ஆத்மா) தானே விளக்கம் கேட்டுக்கொள்ளும் போது, பகவான் விஷ்ணு(ஆத்மா) விடம் இருந்து நமக்கு ஆலோசனை கிடைக்கிறது. உடல் மற்றும் மனம் நாடும் விஷயங்கள் மூலமாகவே நமது பலவீனம் உற்பத்தி ஆகிறது. எனவே, முக்தி என்னும் அமிர்த (என்றும் அழியாத) நிலைக்கு, அவர் நம்மை தூண்டுகிறார். அதற்கு, நம் மனது கடையப்பட வேண்டும்.

மனதை கடைதல் என்பது, வெறுமனே நடத்தி விட முடியாது. நம் புலன்களை அடக்காமல் மனதை ஆராய்வது(கடைவது) என்பது,
இயலாத காரியம். நம்முடைய 5  புலன்களையும் (ஆமை எப்படி தன் உடலை, தன் ஓட்டில் மறைக்கிறதோ அப்படி) அடக்கி இதை செயல்படுத்த வேண்டும். புலன்கள் அடக்கப்படும் போது தான், மனது ஒழுங்காக கடையப்படுகிறது. ஆக கட்டுப்பாடு என்னும் கூர்மம்(ஆமை), மனதில் உருவாகும் போது தான், அதன் கடைதல் நிகழ்ச்சி வெற்றி பெரும்.

நம் மனதில், நல்லவை, கெட்டவை என்று எல்லா எண்ணங்களும் ஒளிந்து கொண்டு, அது கடையப்படும் போது, ஒவ்வொன்றாக வெளிவருகிறது. முதலில், நம் மனதில் உள்ள, காம இச்சைகள் (ஆல கால விஷம்) ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதனால், நம் நல்ல பண்புகள் (தேவர்கள்) எல்லாம் மயக்கமடைகின்றனர். எனவே, உடல் மற்றும் புத்தி இந்த, காம இச்சைகளிடம் சிக்கி, துன்புறுகிறது. எனவே, "குரு" என்னும் தக்ஷிணா மூர்த்தியான சிவபெருமான், நமக்கு கண்டிப்பாக தேவை. அவர், நம் காம இச்சைகளை அடக்கி, நம்மை அந்த ஆல கால விஷத்தில் இருந்து காத்து அருள்வார். பின் போதையை (மயக்கத்தை) அளிக்கும் வருணி பகவான் வெளிவருகிறார். அவர், இந்த மனதை கடையும் செயலே தேவை அற்றது என்ற மயக்கத்தை தந்து, நல்ல மற்றும் கெட்ட குணங்களின் செய்கைகளை நிறுத்த முற்படுவார். நம் செயல்களை குறைப்பது என்பது அடுத்த நிலை. இந்த போதையில்(மயக்கம்) மட்டுமே சிக்காமல், அடுத்தும் மனது அலச(கடைய)ப்படும்   போது, மற்ற சில நல்ல குணங்களும் வெளிப்படுகின்றன. அடுத்து, "மகா லக்ஷ்மி" வெளிவருகிறாள். அதாவது, எல்லா செல்வங்களும், மன திருப்தியும் அடுத்ததாக, நமக்கு கிடைக்கிறது. செல்வங்கள் அனைத்தும், தேவர்களிடமோ (நல்ல குணங்கள்), அசுரர்களிடமோ (கெட்ட குணங்கள்) சிக்கி விடாது. அவை, தற்காலிகமாக, ஒருவரிடம் இருப்பது போலோ, இல்லாதது போலோ காட்சி அளித்தாலும், உண்மையில் எல்லா செல்வங்களும், பகவானுக்கே சொந்தம். அதுவே, நாராயணன், லக்ஷ்மியை மணப்பது. இறுதியில், அழியாத இன்பமான "முக்தி (சமாதி)" நிலை நம்மை அடையும். ஆனால், அப்போதும், சில கெட்ட குணங்கள் (ராகு போன்றவர்கள்), தேவ வடிவில் காட்சி அளித்து, அதை அடைய விடாமல் தடுக்க நினைக்கும். இதையும் பகவானிடம் முழுவதுமாக சரண் அடைந்து விட்டால், அவர் அதை வெட்டி எரிந்து விடுவார். பின்னர், மோகினியாகவும் இருந்து, அழியாத முக்தி நிலையினை, தேவர்களுக்கு மட்டுமே கொடுத்து அருள்வார்.

இதில் அமிர்தம் என்பது, முக்தி நிலை என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, நிலையான வாழ்க்கை என்றும் பொருள் கொள்ளலாம். ஆசைகளில் அகப்படாத, "மனம், உடல், புத்தி, பிராணன்" போன்ற நிலை இல்லாத பொருட்களை அடக்கி ஆள தெரிந்த ஒரு நிலை எனவும் கொள்ளலாம். முதலாளியான நம் ஆத்மா, அதன் அடிமைகளான, "உடல், மனம், புத்தி, பிராணன்" ஆகியவற்றை அடக்கி ஆள்வது என்பது எப்பேறு  பட்ட உன்னத நிலை?

இந்த கதையின் அலசல், என் தற்காலிக ஆன்மிக தேடுதலுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது. இந்த கதை, ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை நமக்கு விளக்குவதற்காக, இலைமறை பொருளாய், நமக்கு வியாச பெருமானால் வழங்க பட்டதாக கருத தோன்றியது. இந்த கதையின் உட்கருத்து ஆராய்ச்சி மூலம், மேல் குறிப்பிட்ட, என்னுடைய சந்தேகங்களுக்கு, ஓரளவு பதில் கிடைப்பதாக கருதுகிறேன்.

அதாவது, கெட்ட குணங்களான அசுரர்கள், தேவலோகம் என்னும் தேவர்கள் (நல்ல குணங்கள்) வாழும் பகுதியையே முதலில் தாக்குகின்றனர்.

கெட்ட குணங்களும்(அசுரர்களும்), நம் மனதின் ஒரு பகுதி என்பதால், நம் மனம் மற்றும் புத்தி, இறைவனை (இதயம் அல்லது ஆத்மா)  சென்று கேட்காதவரை, இறைவன் அவர்களுக்கு துணை நிற்க வருவதில்லை.

நல்ல குணங்கள், மற்றும் கெட்ட குணங்கள் இரண்டுமே உற்பத்தி ஆன இடம் மனது தான். எனவே, இருவருக்கும் ஒரே பெற்றோர்களே!

தேவர்கள் (நல்ல குணங்கள்), தான் செய்யும் நன்மையின் விளைவை எண்ணி அகங்காரம் கொண்டாலும், அதன் விளைவு பிறருக்கு தீமை அளிப்பதில்லை. மாறாக, அதன் பண்பே அடிபடுகிறது. எனவே, இவர்கள், கடவுளுக்கு எதிரிகளாக கருதுப்படுவது இல்லை. அசுரர்கள், என்ன தான், பக்தியில் தேவர்களை மிஞ்சினாலும், அவர்கள் காரணம் கருதியே பக்தியில் ஈடுபடுகின்றனர். எனவே, கடவுள் இடத்தே, ஒரு ஆத்ம சம்பந்தம் அசுரர்களிடத்தில் உண்டாவது இல்லை.

இவ்வாறான கதைகள், வெறும் கற்பனை கதாபாத்திரங்களின் கோர்வை என்ற கருத்து இருக்கும் வரை, இவைகள் இன்றைய தலைமுறைக்கு தேவை அற்ற ஒன்றாகவே கருத தோன்றும். ஆனால், உள்ளார்ந்த கருத்துக்கள் என்னவென்ற ஆராய்ச்சி, அதை மாற்றிவிடும்.

இவ்வாறாக, என் சந்தேகங்களுக்கு, நானே விடைகளை தேடி கொண்டேன்.


இந்த கதை விளக்கங்கள், என்னுடைய வாழ்க்கை பயணத்தில், ஒரு சிறு தெளிவை தந்துள்ளதாக கருதினேன். எனவே தான், இதை உங்களிடமும் இந்த பதிவு மூலம் பகிர்ந்து கொண்டேன்.

இந்த கதை விளக்கம், ஆன்மீக வாதிகளின் நம்பிக்கைக்கு முரண்பட்டதாக தோன்றலாம். ஆனால், இதன் மூலம், யாருடைய மனதையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. அவ்வாறு நிகழ்ந்து இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

எல்லாம் வல்ல இறைவா போற்றி...

Friday, September 17, 2010

ஒரு தத்துவ தரிசனம் - ஸ்ரீ மத் பாகவத கதைகள்

கதைகளை பார்ப்பதும், படிப்பதும், கேட்பதும் மற்றும் சொல்லுவதும் நமது முன்னோர் நமக்கு கற்று தந்த பாடங்களில் மிகவும் அனுபவ பூர்வமானவைகள். அறிவுரைகளையோ அல்லது சிறந்த செய்திகளையோ வெறுமனே மற்றவர்களுக்கு சொல்லும் போது அவை வெகுவாக ஈர்ப்பதில்லை. அதையே கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு கதையாக்கி, சொல்லும் பொழுது மனதில் வெகு விரைவில் பதிகிறது. சிறுவயதினருக்கு, ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் ஒரு நுட்பமான கருவிகளாக இந்த கதைகள் இருந்து வருகின்றன. பண்டைய காலம் தொட்டே, கடினமான அல்லது முக்கியமான ஒரு விஷயத்தை எளிதாக மற்றவர்களுக்கு கதைகள் மூலம் விளக்கும் கலையை நம் முன்னோர்கள் நன்கு கற்று அறிந்திருக்கிறார்கள். புராணம், இதிகாசம் போன்றவைகள் இதற்கு நல்ல உதாரணங்கள். கதைகள், குழந்தைகளை தூங்க வைப்பதோடு  நில்லாமல், தூங்கி கொண்டு இருக்கும் சில நல்ல உணர்வுகளையும் தட்டி எழுப்பும் பொறுப்பையும் கொண்ட கலைகள் என்றே சொல்லலாம்.

உலகில் உள்ள எல்லா மதங்களும், "கதைகள்" என்னும் கலையையே கையில் எடுத்து அவற்றை பரப்பி வந்துள்ளன. பல முனிவர்கள், நமக்கு கற்று கொடுக்க விரும்பிய வாழ்க்கை பாடங்களை கதைகளாக்கி  அதன் மூலம் தான் கூற விரும்பும் கொள்கைகளையும், நெறி முறைகளையும் கூறி வந்துள்ளனர். இதில் இந்து மதத்தில், "வியாசர்" என்னும் முனிவர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார். "மஹா பாரதம்" என்ற இதிகாசத்தையும், 18 புராணங்களையும் நமக்கு அளித்ததோடு அல்லாமல், வேதங்களையும் செவ்வனாக 4 பிரிவுகளாக பிரித்து வழங்கிய பெருமையும் உடையவர். அவர் எழுதிய மற்றும் புராணங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த புராணமாகவும்  கருதப்படும் "ஸ்ரீ மத் பாகவதம்" என்னும் புராணத்தில் வரும் "புரஞ்சரனோ பாக்யானம்" மற்றும் "கஜேந்திர மோக்ஷம்" என்னும் கதைகளை நான் ஒரு ஒலி நாடாவில் சமீப கால கட்டத்தில் கேட்டு அறிந்தேன். அந்த கதைகள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன கதைகளாக இருப்பினும், ஒரு புதிய கோணத்தில் அந்த கதைகள் அலசப்பட்டு இருப்பதை நான் உணர்ந்தேன். அதை இந்த பதிவு மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்.


1) புரஞ்சரனோ பாக்யானம்

புரஞ்சரனோ பாக்யானம் என்ற இந்த கதையை ஒரு சிலர் மட்டுமே அறிந்து இருக்கக்கூடும் என கருதுகிறேன். இந்த கதையை "நாரத மகரிஷி" விளக்கம் அளிக்கும் கதையாக வியாசர் சித்தரித்து உள்ளார். இனி கதையை பார்ப்போம் (இல்லை படிப்போம்).

முன்பொரு காலத்தில் "புரஞ்சரன்" மற்றும் "அவிக்ஞானன்" என்ற இரு பேர்கள், இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர். புரஞ்சரனை காட்டிலும், அவிக்ஞானன் சிறந்த ஞானத்தை உடையவனாக இருந்தான். அவர்கள் இருவரும் எந்த விதமான கவலையும் இன்றி ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வந்தனர். ஒரு நாள், அவர்களுடைய பயணத்தின் இடையில் ஒரு அழகான ஊரை பார்த்தனர். "9" வாசல் கோட்டைகளை கொண்டு, அந்த ஊர் கம்பீரமாக காட்சி அளித்தது. அங்கே, மிகவும் அழகான ஒரு பெண், 5 தலை நாகத்தை குடையாக கொண்டு, அம்சமாக நடந்து வரும் காட்சியை கண்டனர். அந்த நகருக்கு ராணியான அவளின் அழகில் "புரஞ்சரன்" மயங்கி போனான். அவளை கல்யாணம் செய்து கொண்டு அந்த நகரத்திற்கு ராஜாவாகி, அங்கேயே தங்கி விடுவது என்று முடிவு செய்தான். புரஞ்சரனை கண்ட அந்த ராணியும், அவன் அழகில் மயங்கி போனாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி, முழு மன திருப்தியுடன் வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத நண்பன் "அவிக்ஞானன்", இதனை கண்டு மிகவும் ஆச்சர்யம் அடைந்தான். தன் நண்பன் புரஞ்சரனிடம், "நன்றாக யோசித்து கொள் நண்பா, இது உண்மையிலேயே உனக்கு தேவை தானா?" என்று கேட்டான். ஆனால் புரஞ்சரனின் அளவு கடந்த ஆசையை கண்டு, நண்பன் அவிக்ஞானன், அவனுக்கு அந்த ராணியை மனம் செய்து வைத்து விட்டு, தனியாக புறப்பட தயார் ஆனான். இப்படி புரஞ்சரனுக்கும், அந்த அழகு மங்கைக்கும் திருமணம் நடந்தது.

அவர்கள் நீண்ட காலம் வெகு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அந்த ராணி, எதை சொன்னாலும் மறுக்காமல் அதை புரஞ்சரன் செய்து வந்தான். இடையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் மனைவியிடம் சொல்லாமல் வேட்டைக்கு சென்று வந்தான். அதை கேள்வி பட்ட ராணி, தலைவிரி கோலமாய் கூச்சலிட ஆரம்பித்தாள். "தன்னிடம் கேட்காமல் வேட்டைக்கு மட்டும் அல்ல, இனி எதையும் செய்ய கூடாது" என அழுது ஆர்ப்பாட்டம் இட்டாள். திகைத்து நின்ற புரஞ்சரன், "இனி உன்னை கேட்காது எதையும் செய்ய மாட்டேன்" என கூறி சமாதான படுத்தினான். அதே போல, தன் மனைவி சொல் படி மட்டுமே வாழ்ந்து வந்தான். நாட்கள் ஓடின. செழிப்பான அந்த அழகிய நகரத்தை,  எதிரிகள் நோட்டம் இட ஆரம்பித்தனர். எப்படியும் அந்த நகரத்தை தன் வசப்படுத்த அவர்கள் நினைத்தனர்.

எதிரி நாட்டு மன்னன், அந்த அழகிய நகரத்தை எப்படி தன் வசப்படுத்துவது என யோசித்து கொண்டே இருந்தான். அப்போது, அந்த எதிரி மன்னனிடம், அவனை விட வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, அந்த நகரத்தை கைப்பற்ற உதவுவதாக கூறிக்கொண்டு வந்தாள். ஏற்கனவே அவனும் புரஞ்சரன் ஆளும் நகரத்தை கைப்பற்ற யோசித்து கொண்டு இருந்த படியால், அந்த பெண்ணை தன் திட்டத்தில் சேர்த்து கொள்ள முடிவு செய்தான். மேலும் அந்த பெண், அந்த எதிரி நாட்டு மன்னனிடம் தன்னை மணமுடித்து கொள்ளும் படியாக கேட்டு கொண்டாள். ஆனால் அவன், "உன்னை என்னால் மணம் செய்து கொள்ள இயலாது, ஆனால் என் தம்பியை உனக்கு கொடுக்கிறேன், கூடவே 360 வீரர்களை கொண்ட படையும் உனக்கு தருகிறேன். இவற்றை கொண்டு, புரஞ்சரன் வசிக்கும் நாட்டின் மீது படை எடுத்து எனக்கு வெற்றியை பெற்று தா" என கூறினான். இதற்கு ஒரு மனதாக, அந்த வயது முதிர்ந்த பெண்ணும் சம்மதித்தாள். தனக்கு அளிக்கப்பட்ட புது படைகளை பார்த்த அவளுக்கு, ஆச்சர்யமாக இருந்தது. காரணம், அந்த படை வீரர்கள், தன் உடம்பில் பாதி வெள்ளையாகவும், பாதி கருப்பாகவும் இருந்தனர். ஆக ஒரு வழியாக, புரஞ்சரனை வீழ்த்தும் திட்டம் தயார் ஆனது.

முதலில், 360 பேர் கொண்ட படை வீரர்கள் போருக்கு முன் நின்றனர். பின் அந்த முதியவளும், எதிரி நாட்டு மன்னனின் தம்பியும் போர்க்களத்தில் நின்றனர். இந்த போர்க்காட்சியை சற்றும் எதிர் பார்த்திராத, புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுந்த சோகம் அடைந்தனர். தனது மந்திரியின் துணையுடன், அவர்களும் போர்க்களத்தில் இறங்கினர். போர் வெகு நாட்கள் நடந்தன. முதலில் 360 போர் வீரர்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தனர். பின் அந்த முதியவளும் அவளது புது கணவனான, எதரி நாட்டு மன்னனின் தம்பியும், அந்த நகரத்தை அடைந்தனர். கடைசி வரையில் புரஞ்சரனின் மந்திரி மட்டும், சற்றும் தளராது போர் செய்து கொண்டு இருந்தார். இறுதியில், எதிரி நாட்டு மன்னனும் போர்க்களத்தில் நுழைந்து, புரஞ்சரனின் நகரத்தை கை பற்றினர். அந்த ஊரை விட்டு, புரஞ்சரன் மற்றும் அவனது மனைவியை துரத்தி அடித்தனர்.

தனது நகரத்தை இழந்த புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுத்த கஷ்டங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்கள் இருவரும், இணை பிரியாமல் பல பிறவிகள், இறந்தும்-பிறந்தும்-வாழ்ந்தும் வந்தனர். புரஞ்சரன், பிறவிகள் செல்ல செல்ல தான் செய்யும் கர்மா காரணமாக, முன்பை இழிந்த பிறப்பாக எடுத்து வந்து இறுதியில் மிகவும் இழிவான பிறவியை எடுத்து, அப்போதும் தன் மனைவியை பிரியாமல் வாழ்ந்து வந்தான் (ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்து வந்தது, பந்தம்). இந்நிலையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் பூர்வ ஜென்மத்து சிநேகிதனான அவிக்ஞானனை தன் வழியில் கண்டான். அவிக்ஞானனும் தன் ஞானத்தால் நண்பன் புரஞ்சரனை அடையாளம் கண்டு விட்டான். அவிக்ஞானனை கண்ட புரஞ்சரன், "தன்னை எப்படியாவது உன்னுடனே சேர்த்துக்கொள் நண்பா" என அழுது புரண்டான்.
"நான் தான், உனக்கு அப்போதே எச்சரிக்கை விடுத்தேனே நண்பா. நீ தான் அதை கேட்கவில்லை. சரி, பரவாயில்லை" என்று கூறி, தன் நண்பன் புரஞ்சரனை, மீண்டும் பழைய நிலைக்கே தன்னுடைய சக்தியால் மாற்றி தன்னுடன் சேர்த்து கொண்டான், அவிக்ஞானன்.

இவ்வாறு இந்த கதை முடிவு பெறுகிறது. இந்த கதையை வெறுமனே கேட்டால், இதில் என்ன பெரிய கருத்து அடங்கியுள்ளது என தோன்றும். இந்த கதையை "ஸ்ரீ மத் பாகவதத்தில்" குறிப்பிட காரணம் என்ன? வெறும் இருவரின் கதையை, இறைவன் சம்பந்தபட்ட புராணம் ஏன் குறுப்பிட வேண்டும்?

இந்த கதைக்கான விளக்கத்தை நாரதரே குறிப்பிடுவதாக, வியாசர் கூறியுள்ளார். இந்த கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும், உண்மையில் வெறும் மனிதர்கள் அல்ல. உண்மையில் அவை மற்றொன்றின் உருவகங்கள். அவை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

புரஞ்சனன் - ஆத்மா
அவிக்ஞானன் - பரமாத்மா (பகவான்)
9 வாசல் கோட்டைகள் கொண்ட நகரம் - உடல் (9 துவாரங்களை உடையது)
நகரத்து ராணி - புத்தி 
5 தலை நாகம் - பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆளும் மனது 
வேட்டை - "கனவு" போன்ற புத்தியின் தொடர்பு இல்லமால் செய்யும் செயல்கள்
முதிய பெண் - மூப்பு (நோய்கள்) 
எதிரி நாட்டு மன்னன் - மரணம்
எதிரி நாட்டு மன்னனின் தம்பி - தைரியம் இன்மை 
360 படை வீரர்கள் - 360 நாட்கள் (வருடம் அல்லது காலம்)
புரஞ்சரனின் மந்திரி - மன உறுதி

இப்போது இந்த கதா பாத்திரங்களை, நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் ஆத்மாவாகிய நாம் எல்லோரும் ஒரு "புரஞ்சரன்" தான். அவிக்ஞானன் என்னும் பரமாத்மாவாகிய இறைவனிடம் நாம் எப்போதும் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளோம். இந்த உடல் மீதும், வெளி விஷயங்கள் மீதும் கொண்ட பற்று, நம்மை இறைவனிடம் இருந்து பிரித்து விட்டன. 9 துவாரங்களை உடைய உடல் என்னும் நகரத்தை ஆள்வதிலேயே நம் மனம் லயித்து விடுகிறது. "புத்தி", என்ற ராணியை பற்றி, உடல் என்னும் நகரத்தை கைப்பற்றுகிறோம். ராணியின், சொற்படி நாமும்(ஆத்மா), மயங்கி போய் கிடக்கிறோம். புத்தி சொல்லாத விஷயங்களை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, அது நம்மை எச்சரிக்கிறது. பின், எதிரிகளான நோயும், தைரியம் குறைவும், நம்மை தன் படைகளான காலத்தின் உதவியுடன் நெருங்குகிறது. 360 படை வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளுக்கு ஒப்பிட படுகின்றனர் (பண்டைய வேத காலங்களில் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே) . இந்த படை வீரர்கள், பகல்(வெள்ளை), இரவு(கருப்பு) என இரண்டு சம அளவு நிறங்களில் தன் தேகத்தை உடையவர்கள். இந்த படை வீரர்கள் ஒவ்வொருவராக நெருங்க நெருங்க, அதாவது நாட்கள் செல்ல செல்ல, அவர்கள் கூடவே, நோயும் , தைரியம் குறைவும் வருகிறது. கடைசி வரை போராடும் மன உறுதி என்னும் மந்திரியின் அழிவிற்கு பின் மரணம் என்னும் எதிரி நாட்டு ராஜா நம் உடலை வெல்கிறான். இவ்வாறு பல பிறவிகள் கடந்தாலும், இதே உயிர்-உடல் பந்தம் தொடர்கிறது. எப்போது நம்மால் எதுவுமே இயலாமல், என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் என்று நம் நண்பனிடம்(இறைவனிடம்) சென்று அடைக்கலம் புகுகிறோமோ, அன்று மீண்டும் கடவுளின் அனுகிரகத்தால், கடவுளிடம் இணைகிறோம். இவ்வாறு இணைந்தவன், மீண்டும் வேறு ஒரு ராணி(உடல்) இடம் மயங்குவது இல்லை. இந்த நிலையே, ஒவ்வொரு பிறப்பிற்குமான இறுதி நிலை (முக்தி நிலை).

இந்த கதைக்கு நாரதர் கொடுத்த விளக்கம் மதங்களுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவைகள் என நினைக்கிறேன். இவ்வாறான கதைகளை கேட்கும் போது, மிகவும் சாதாரணமாக நமக்கு பட்டாலும் அவற்றில் பல உள் கருத்துக்கள் சூட்சமமாக பொதிக்கபட்டுள்ளன.

2) கஜேந்திர மோக்ஷம்

இந்த கதைக்கு "அறிமுகம்" தேவை இருக்காது என நினைக்கிறேன். குழந்தைகள் கூட முதலையிடம் சிக்கிய யானையின் கதையான இந்த கஜேந்திர மோக்ஷம், பற்றி அறிந்து இருக்கக்கூடும். இது மிகவும் சிறிய மற்றும் எளிய கதைதான். இனி கதையை பார்ப்போம்.

கஜேந்திரன் என்ற மிகவும் வலிமை பொருந்திய யானை ஒன்று, ஒரு காட்டில் தன் யானை கூட்டங்களுடன் வசித்து வந்தது. யானை கூட்டத்துக்கே தலைவன் ஆன அந்த யானை மிகவும் சந்தோசமாக, தன் புஜ பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தது. ஒரு நாள், தன் கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளுடன் களியாட்டம் போட்டு கொண்டே ரம்மியமான ஒரு குளத்தின் அருகே வந்தது.  அந்தி சாயும் நேரம். மலை அடிவாரத்தில் அமைந்து இருந்த அந்த குளத்தை சுற்றியும் இருந்த பூத்து குழுங்கிய சோலைகள் கஜேந்திரனின் மனதை பறித்தன. அருகில் இருந்த அழகான பெண் யானைகளுடன் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்த படி விளையாடி மகிழ்ந்தது. அப்போது, அந்த குளத்தில் பூத்து இருந்த அழகான தாமரை பூ, கஜேந்திரனின் கண்ணில் பட்டது. அதை பறித்து கொண்டு வந்து விட்டால், மற்ற பெண் யானைகள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்தது. உடனே குளத்தில் காலை வைத்து, இறங்க ஆரம்பித்தது. காத்து கொண்டு இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலை பிடித்து விட்டது. முதலில் இந்த சின்ன முதலை, என்னை என்ன செய்து விடும் என்று மிகவும் அலட்சியமாக நினைத்தான், கஜேந்திரன். பின்பு மெல்லமாக, முதலையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சி செய்தான். நிலைமையின் மோசத்தை அறிந்த கஜேந்திரன், மிகவும் முயற்சியுடன் போராட ஆரம்பித்தான். கூடவே இருந்த யானைகளால் எந்த உதவியும் கஜேந்திரன்னுக்கு செய்ய இயலவில்லை. போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டம், தேவர்களின் நாட்கணக்கில் 100  வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. தேவர்களின் 1 நாள் என்பது, நம்முடைய நாட்கணக்கில் 1 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நம்மால் எதையுமே செய்ய இயலாது என கஜேந்திரன் உணர்ந்தான். அவன், இறைவனை நோக்கி "உன் உருவம் எப்படி பட்டது என எனக்கு தெரியாது. உண்மையில் இந்த லோகங்கள் அனைத்திற்கும் உரியவன் ஆன இறைவனே நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆராதிக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்றுக இறைவா!" என இறைவனிடம் சரண் அடைந்தது.

இதனை கண்ட, விஷ்ணு பெருமாள், உடனடியாக தன் கருட வாகனத்தில் ஏறி புறப்பட்டார். கருடனின் வேகம் போதாத படியால், தானே கருடனையும் தூக்கி கொண்டு அந்த குளக்கரைக்கு வந்து சேர்ந்தார். தன் சக்ராயுதத்தை வீசி, முதலையின் பிடியில் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார். பின் கஜேந்திரனுக்கு பனி விடைகளும் செய்தார். இவ்வாறாக இந்த கஜேந்திர மோக்ஷம் கதை நிறைவு பெறுகிறது.

இந்த கதையை கேட்டவுடன் ஒரு சில சந்தேகங்கள் எனக்கு வந்தன. அவை,

  • கஜேந்திரனுக்கும், முதலைக்கும் இடையில் 100 தேவ வருடங்கள் போராட்டம் நடந்ததாக ஸ்ரீ மத் பாகவதம் குறிப்பிடுகிறது. உண்மையில் ஒரு யானையோ அல்லது முதலையோ அத்தனை காலம் வாழ முடியுமா?
  • கஜேந்திரன், முதலை இடம் சிக்கியவுடனேயே, பெருமாள் வந்து காத்து இருக்கலாம். ஆனால், இத்தனை காலங்கள் பொறுமையாக இருந்து விட்டு பின்பு அவசர அவசரமாக வந்து காத்தது, ஏன்? 
இந்த இரண்டு சந்தேகங்கள் என் மனதில் எழுந்தது. அதற்கு அருமையான ஒரு விளக்கத்தை கேட்டு அறிந்தேன். இந்த கதையிலும், ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மற்றொரு பொருளுக்கு உவமை ஆகவே அமைக்கப்பட்டுள்ளன. 

கஜேந்திரன் - பிறவி
மற்ற யானைகள் - நாம் அல்லாத பிறர் (மற்ற ஜீவன்களின் பிறவிகள்) 
முதலை - காலம்
கருடன் - வேதம்


அதாவது, ஒவ்வொரு பிறவி காணும் போதும் கஜேந்திரன் போல, நாம் நம் புஜ பலத்தை நம்பிக்கொண்டு, நாமே எல்லா செயல்களுக்கும் காரணம் என்ற மனப்பாங்குடன், "அகங்காரம்" கொண்டு செயல் படுகிறோம். காலம் என்னும் முதலை, நம்மை பிடித்து "மரணம்" என்னும் நிகழ்ச்சியை (காலை பிடித்தல்) நிகழ்த்தி விடுகிறது. எனினும், பல பிறவிகளில் நாம் காலத்தை வெல்லும், இறுமாப்புடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். இதுவே "100 தேவ வருடங்களுக்கும் மேலாக" என்ற கருத்தின் மையம் ஆகும். அதாவது பல லட்சம் பிறவிகள் எடுத்தும் நாம் காலத்துடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை யானைகளுக்கு தலைவன் என்ற போதும், அவர்கள் நம் மரணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போய் விடுகிறது.

என்று நாம், "நம்மால் இனி எதையும் சாதிப்பது முடியாது" என்று இறைவனிடம் சரண் அடைகிறோமோ அன்று தான், இறைவன் நமக்கு தென் படுகிறான். அதாவது, நம் அகங்காரம் என்னும் திரை நம்மை விட்டு விலகும் போது மட்டுமே இறைவன் நமக்கு தென்படுகிறான். இறைவன் தென் படுவது என்பது நம் ஆத்மாவின் சுய தரிசனம் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் வேதங்களின் (நல்ல நெறி முறைகள்) சாட்சி கொண்டே இறைவன் நம்மை முதலை என்னும் காலத்தின் பிடியில் இருந்து ரட்சிக்கிறான். இவ்வாறு கஜேந்திர மோக்ஷம் கதையும் உள்ளூடாக பல உள் கருத்துகளை கொண்டு உள்ளது.


கதைகள் சிலவற்றை கேட்கும் போதே, அவைகளின் உள்கருத்துகள் நமக்கு விளங்கி விடும். ஆனால், சில கதைகளை கேட்கும் போது வேடிக்கையாகவும், நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் அவ்வாறான புராண கதைகள் கூட, உள்ளூர ஏதோ மற்றொன்றை உருவகமாக சொல்ல நினைத்து அமைக்க பட்டு இருக்கலாம். உதாரணத்திற்க்கு, மகா பாரத கதையில் பஞ்ச பாண்டவர்கள் 5 பேர் தான். ஆனால் கௌரவர்கள் 100 பேர். கடைசியில் பாண்டவர்களே வென்றார்கள். உண்மையில் இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். நல்ல பண்புகள், உண்மையில் கெட்ட பண்புகளை விட எண்ணிக்கையில் குறைவு தான். ஆனாலும் இறைவன் நல்ல பண்புகளுக்கு மட்டுமே துணை செய்து கடைசியில் அவைகளுக்கு வெற்றியை கொடுப்பான். இவ்வாறு, கதைகளை அதன் உள்நோக்கம் என்ன என்று அலச முயன்றால் பல அறிய தத்துவங்கள் நமக்கு கிடைக்கலாம்.

இனி வெறுமனே, புராண கதைகளை கேலி செய்து சிரிப்பவர்களுக்கு இடையில் நாம் இருந்தாலும், அது ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என சிந்தித்து பார்க்க முற்படுவோம்.

Wednesday, June 23, 2010

ஆசை என்றொரு பூதம்


"ஆசையே அழிவுக்கு காரணம்". - இதை சொல்லாத ஆத்மஞானிகளே கிடையாது. பகவான் கிருஷ்ணரில் இருந்து, இயேசு, புத்தர், மஹாவீரர் என எல்லா பரமாத்மாக்களும், இந்த கருத்தை வலியுறுத்த தவறவில்லை.

ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, அழகான பெண்கள், புகழ், ஏன் நல்ல பெயற்கும் கூட ஆசை படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது. எதற்கும் ஆசை படாதவர்கள் யாரேனையும் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடை முறையில் சாத்தியபடாத ஒன்று என்றே கூறலாம்.

அப்படி "ஆசை" இருந்தால் தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!. ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான், நம் இலக்குகள் சரியாக இருக்கும் போது மட்டும்... "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் ஆசைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும் என்றும் ஒரு நிபந்தனை!. பள்ளியில் படிக்கும் மாணவன், தான் படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறான் என கொள்வோம். எதற்கு என்று கேட்டால், பொருளிள்ளதவர்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு என்று கூறுகிறான். இந்த உயர்ந்த லட்சியம், அவன் மருத்தவன் ஆன பின்பும் தொடர்ந்தால், அவன் படிக்கும் போது கொண்ட "ஆசை", உண்மையிலேயே உயர்ந்தது எனலாம். ஆனால் எத்தனை ஆசைகள் இப்படி ஆரம்பித்த படியே நீடிக்கின்றன?.

"உயர்ந்த ஆசைகள்" என்பதை எப்படி வரையறுக்க முடியும்? பகவத் கீதை, புலன் இன்பங்களில், உயர்ந்த யோகி, பற்று (ஆசை) வைக்க மாட்டான் என்று கூறுகிறது. புலன் இன்பங்கள், மனதுடன் தொடர்பு உடையவை. மனதை கட்டுப்படுத்த முடியாதவனே, புலன் இன்பங்களில் ஆசை வைக்கிறான். இந்த ஐம்புலன்களை மகிழ்ச்சி படுத்தும் செயல்கள் ஆகிய பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல் மற்றும் தொடுஇன்பம் ஆகியவைகளை பொறுத்த ஆசை, தாழ்ந்தவைகள் என்று கூறப்படுகிறது. இந்த புலன் இன்ப ஆசைகள், எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என பகவத் கீதை கீழ் படி கூறுகிறது.

"த்யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேக்ஷுபஜாயதே
ஸங்காத்ஸஞ்சயாதே காம: காமாத்க்ரோதோபிஜாயதே" (2.62 )

"க்ரோதாத்பவதி ஸம்மோஹா: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாசோ புத்திநாசாத்ப்ர்ணச்யதி" (2.63)


சதா உலக விசயங்களை யோசித்து கொண்டு இருக்கும் மனிதனுக்கு அதில் பற்று உண்டாகிறது. பற்றினால் ஆசை (காம:) உண்டாகிறது. ஆசையினால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தால் நாம் பெற்ற "புத்தி" யில் நாசம் உண்டாகிறது. புத்திநாசம் (அறிவு அகன்ற நிலை) ஏற்பட்டவனுக்கு நன்மை எனபது ஏது?

இவ்வாறு, இந்த இரண்டு ஸ்லோகங்கள் பொருள் தருகின்றன. எத்தனை அழகான மற்றும் ஆழமான ஆராய்ச்சி!!!. அடிப்படையை ஆராய்ந்து அதன் முடிவு வரை விளக்குகிறது, இந்த ஸ்லோகங்கள். அக ஆராய்ச்சியில் நிலை கொண்டவன், உலக விஷயங்களுக்காக பெரிதாக அலட்டி கொள்வதில்லை. மேலும் அவன் தன் ஆத்ம சுகம் ஒன்றையே உயர்வென கருதுகிறான், போன்ற விளக்கங்கள் உண்மையில் உலக பொருட்களுக்கான ஆசைகள் துச்சமானவைகள் தான் என ஆணித்தரமாய் கூறுகிறது.

மேலும் ஆசையின் அடிப்படையான குணங்கள் என்ன என்றும், அது எங்கே குடி கொண்டுள்ளது என்றும் கூட கீதை தெளிவு பட கூறுகிறது.

"ஆவ்ருதம் ஜ்ஞானமேதென ஜ்ஞானினோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேன ச" (3.39)

"இந்திரியாணி மனோ புத்தி ரஸ்யாதிஷ்டானமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞானமவ்ருத்ய தேஹினம்" (3.40)


கீதை யை பொறுத்தமட்டில், ஆசை (காமம்) என்பது ஞானிகளின் பரம எதிரி என்று வர்ணிக்க படுகிறது. மேலும் ஆசை (காமம்) பெற்றுள்ள குணங்கள் என மூன்று விஷயங்கள் கூறப்படுகிறது. அவை : "நெருப்பிற்கு சமமானது", "விரும்பிய வடிவை பெற வல்லது" மற்றும் "ஒருபோதும் அடைவதால் திருப்தியுராதது அதாவது ஒருபோதும் முழுமை அடையாதது". (3.39)

"புலன்கள், மனம், புத்தி" இந்த மூன்றும் தான் ஆசையின் இருப்பிடங்கள். மேலும் ஆசையானது "மனம், புத்தி மற்றும் இந்திரியங்கள் (புலன்கள்)" ஆகியவற்றை ஆட்கொண்டு, ஞானம் எனும் பரம்பொருளை மறைத்து நிற்கின்றது. (3.40)

இந்த இரண்டு ஸ்லோகங்கள், ஆசையின் குணங்கள் மற்றும் இருப்பிடத்தை நமக்கு விளக்கமாக கூறுகிறது. நமது எதிரியின் குணங்கள் நமக்கு தெரிந்தால், அவனை எப்படி வீழ்த்தலாம் என்பது பற்றி தெளிவான வியூகம் அமைக்க முடியும். அது போல அவன் எங்கே இருக்கிறான் எனவும் தெரிந்து விட்டால், தாக்குவது மிக சுலபமாக கூடும். இந்த இரண்டு ஸ்லோகங்கள் அதற்குத்தான் வழி அமைத்து கொடுக்கிறது. ஞானியின் ஜென்ம விரோதியாக "ஆசை" கூறப்படுகிறது. மேலும் அதன் குணங்கள் தெள்ள தெளிவாக விவரிக்க படுகிறது. முதலில் நெருப்பினை போன்றது என்பதன் மூலம், அது அழிக்கும் தன்மையை பெற்று இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் நெருப்பு எரிவதற்கு பொருட்கள் கொடுக்கப்படும் வரையில் அது மேலோங்கி வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அது போல, ஆசையிடம், அது விரும்பும் பொருளை கொடுத்தாலும், அது இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். இரண்டாவதாக, ஆசை விரும்பிய வடிவை (காமரூபேண) பெற வல்லது என கூறப்படுகிறது. முதலில் "பொருளாசை" எனில், அதை அடக்கி விட்டாலும், "பெண்ணாசை", "புகழாசை", என பல புதிய வடிவில் வந்து நம்மை ஆட்கொள்ளும். எனவே, ஆசைக்கு விரும்பிய வடிவம் பெரும் குணம் உள்ளது எனப்படுகிறது. மூன்றாவதாக, ஆசை ஒரு போதும் திருப்தி அடையாதது என கூறப்படுகிறது. ஒருவன், சிப்பாயாக இருந்து, தளபதியாக வேண்டும் என்று ஆசை கொண்டால், அவன் தளபதியாக ஆகும் போது, அவன் மன்னனாக வேண்டும் என்று புது ஆசை, அதாவது திருப்தி அடையாமல் அடுத்த நிலை நோக்கிய ஆசை புகுந்து விடுகிறது. இப்படி ஆசையின் குணங்கள் விளக்க படுகிறது.

மேலும் ஆசை, எங்கு குடி கொண்டு இருக்கிறது என்றால், அது "புலன்கள்", "மனம்", "புத்தி" என்ற மூன்றின் மீதும் குடி கொண்டு இருக்கிறது. புலன்கள் என்பது நம் உடலின் அங்கங்கள். மனம் என்பது புலன்களை விட நுண்ணியது ஆனால் அதை விட சக்தி வாய்ந்தது. புத்தி, மனதை விட நுண்ணியது மற்றும் சக்தி வாய்ந்தது. எடுத்த எடுப்பில் சிகரத்தை தொட்டு விடுவதை முயற்சிப்பதை விட, படி படியாக செல்வது சிறந்தது. அது போல, முதலில் புலன்களை அடக்கி அதன் மூலம் மனம், புத்தி என்ற இரண்டையும் அடக்கலாம் என கூறப்படுகிறது. எப்படி, புகை சூழ்ந்து இருக்கும் நெருப்பினை காண முடியாதோ, அது போல, ஆசை சூழ்ந்து இருக்கும் ஞானத்தை காண முடியாது எனவும் கூறப்படுகிறது.

ஆசைகள், உண்மையில் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, கோபம் வருகிறது. பின் அதன் வழியாக அனைத்து கெட்ட எண்ணங்களும், நம் உள் புக ஆரம்பிக்கின்றன. உலகெல்லாம் ஒளி விடும் சூரியனை, கையாலோ, பிற பொருட்களாலோ மறைக்க நினைப்பதை விட, நம் கண்களை மட்டும் மூடி கொள்வது புத்திசாலி தனம் அல்லவா. அது போல, ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட துடிப்பதை விட, ஆசைகளையே அடக்குவது தான் மிகவும் சிறந்தது என நினைக்கிறேன்.

தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு சைக்கிள் மட்டும் வாங்கி விட்டால் போதும் என்ற ஒருவனது ஆசை, அடுத்து அவன் சைக்கிள் வாங்கிய பின், மோட்டார் சைக்கிள், கார் என அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உண்மையில் அவனுக்கு மோட்டார் சைக்கிள் அல்லது கார்களுக்கான தேவை இல்லாவிடினும் அவற்றை அடைய நினைக்கும் ஆசையில், அவனே தன்னை துன்பத்தில் ஆட்படுத்தி கொள்ள விழைகிறான். இவ்வாறு தேவைக்கு மேல் உள்ள ஆசைகளின் பிடியில் சிக்காதவர்கள் உண்மையில் எத்தனை பேர்? ஆசைக்கு அளவு தான் ஏது?

வாழ்க்கையில் துன்பம் அற்று வாழ்வதற்கு, புத்தர் நான்கு உண்மை கோட்பாடுகளை குறிப்பிடுகிறார். அவை, 

  1. எல்லா உயிர்களும் துன்பத்தை உள்ளடக்கியவை.
  2. எல்லா துன்பங்களும், ஆசைகளில் இருந்து உண்டானவை. 
  3. எல்லா துன்பங்களும், ஆசைகளை அகற்றும் போது முடிகின்றன. 
  4. அதனால் எல்லா துன்பங்களுக்கும் முடிவு காண வழி (ஆசைகளை அகற்றுதல்) உள்ளது.

எத்தனை சிறந்த கருத்துகள்.

"ஆசையே அழிவு" என்று பரமாத்மா மகாவீரரும் குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாள், காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கும் போது, குளிரால் நடுங்கி கொண்டு இருந்த ஒரு ஏழையை பார்த்தார். தான் அணிந்து இருந்த வஸ்திரத்தின் பாதியை கிழித்து கொடுத்து அந்த எளியவனுக்கு உதவி செய்தார். அந்த ஏழை, மகாவீரர் அளித்த அந்த துணி மிகவும் விலை உயர்ந்தது என தெரிந்த கொண்ட படியால், மீதி பாதியையும் அவரிடம் இருந்து பெற்று விட வேண்டும் என ஆசை கொண்டான். மீதி பாதியை, அவரிடம் கேட்டு பெற்று விடலாம் என, மகாவீரர் இருக்கும் இடத்திற்கு சென்றான். அப்போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதிர்ஷ்ட வசமாக, மீதி பாதி துணியும் கீழே விழுந்து கிடந்தது. "கேட்டு பெற வேண்டும்" என்று கிளம்பியவன், ஆசை மிகுதியால், அவருக்கு தெரியாமலேயே அதை அடைந்து விட எண்ணினான். இங்கே, "அகங்காரம்", அல்லது "நற்பெயருக்கான ஆசை" புதிதாக அவனிடம் எட்டி பார்த்து விட்டது. அதாவது, "நான் இவரிடம் கேட்டு பெற வேண்டுமா?" என்ற அகங்காரமோ, அல்லது, "மறுபடியும் இவரிடம், மீதி துணியை கேட்டால், இவர் என்னை தப்பாக நினைக்க கூடும். எனவே தெரியாமல் எடுத்து சென்றால் அவர் என்னை தப்பாக நினைக்க மாட்டார்" என்ற "நற்பெயருக்கான" ஆசையோ அவனிடத்தில் புதிதாக தோன்றியது. எனவே, திருட துணிந்தான். திருடிய பின், காலில் முள் குத்தியதால் சத்தம் போட மகாவீரர் விழித்து கொண்டார். இந்நிலையில் சிறிதும் கோப படாத மகாவீரர், "இந்த மீதி பாதி துணியில் நான் கொண்ட ஆசை அல்லவா, இவனை திருடனாக மாற்றியது" என்று நினைத்து வருந்தினாராம். எத்தனை பெரிய ஞான நிலை!!!.

உண்மையில் ஆசைகளை, நாம் நமக்காக மட்டுமே உருவாக்கி கொள்வதில்லை. அவைகள் நம்மில் இருந்து நம் பரம்பரைகள், அல்லது நம்மை சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் விதைத்து கொண்டும் தான் இருக்கிறோம். நான் மருத்துவன் ஆக முடியவில்லை என்பவன், தன் மகனை எப்படியும் டாக்டர் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பில், சில தவறேனும் (பணம் கொடுத்து) செய்து தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுகிறான். ஆனால் உண்மையாக அந்த படிப்பை பெற வேண்டிய ஒரு மாணவனது ஆசைகள் அடக்கப்பட்டு, அங்கே அடுத்த ஆசைக்கான விதை விதைக்கப்படுகிறது. அந்த ஆசைகள் நிறைவேறாத மாணவன், அடுத்து தன் வாரிசு மூலம் விட்டதை அடைய நினைக்கிறான். அல்லது தன் நிலைக்கு மாற்றான ஒரு தவறான வழியை கையில் எடுத்து ஆசைகள் அடங்காத கோபத்தை பிறர் இடத்தில் காட்டுகிறான். எனவே ஆசை எந்த வகையிலும் நம்மை மட்டும் பாதிப்பவை அல்ல. அவைகள் பிறரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வல்லது. "கோபம், வக்கிரம் போன்ற புதல்வர்களை பெற்ற அன்னை - ஆசை" என்று ஒரு சொல்லும் உண்டு.

ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை. இதை நம்மால் தனியே நின்று சாதிப்பது என்பது மிகவும் கடினம். "கடவுள் பக்தி" என்ற ஒரு நண்பனின் உதவி கொண்டே அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். நண்பர்களே, ஆசை என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியா விடினும், முடிந்த வரை தேவைகளுக்கு மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம். படிப்பதையும், நினைப்பதையும் செயல்முறை படுத்தும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்து துணை புரிவாராக ("தெய்வ பக்தி" இல்லாத நண்பர்கள் எனின் மன உறுதியை, இறைவன் என பொருள் கொள்க).

"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" (கிருஷ்ணா - கிருஷ்+ந. "கிருஷ்"- சுழற்சியான பிறப்புகள். "ந" - நிறுத்துபவன்)

Friday, May 28, 2010

ஸ்ரீ காலஹஸ்தி - காலம் கடந்ததால் அஸ்தி


திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்க படுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூற படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.

இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒரு நாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடை விடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவ பெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.

மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவ பெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒரு நாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
  • இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களை களையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது. 
  • ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவ பெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து,  அதை இந்த தலத்தில் உள்ள சிவ பெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவ லோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்ற படுகிறார்.
  • இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
    • நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
    • ஆகாயம் - சிதம்பரம் கோவில் 
    • நீர் - திருவானைக்காவல் கோவில் 
    • நெருப்பு - திருவண்ணாமலை கோவில்  
  • "மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
  • "ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு. 
இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜ கோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்க படும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்க பட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!. 

இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது. 

கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். 

ஓம் நம சிவாய!...

Search This Blog