Thursday, November 19, 2009

சிறந்த இந்தியன் - சச்சின்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்... கிரிக்கெட் உலகின் முடி சூட மன்னனாக திகழும் இவர், நிகழ்த்தி இருக்கும் கிரிக்கெட் சார்ந்த சாதனைகள் கிட்டத்தட்ட 70 க்கும் மேலாக நீண்டு கொண்டே செல்கிறது. அவற்றில் முக்கியமான சில உங்களின் பார்வைக்கு கீழே...

1 ) அதிக பட்சமான ஒரு நாள் ஆட்ட ஓட்டங்களை எடுத்தவர் (தற்போதைய கணக்கின் படி 17178  ஓட்டங்கள்)
2 ) அதிக பட்சமான ஒரு நாள் ஆட்டத்திற்கான சதங்களை எடுத்தவர் (இன்று வரை 45 சதங்கள்)
3 ) அதிக பட்சமான ஆட்ட நாயகன் விருது வாங்கியவர்
4 ) அதிக பட்சமாக 10 வருடங்களுக்கும் மேல் உலக தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்.
5 ) டெஸ்ட் போட்டிகளில் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தவர் (தற்போதைய கணக்கில் 12777  ஓட்டங்கள்)
6 ) அதிக பட்சமாக ஒரு நாள் ஆட்டங்களில் 90 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சதம் எடுக்காமல் ஆட்டமிழந்தவர் (17 முறை 90  ஓட்டங்களுக்கு மேல் பெற்று ஆனால் சதத்தை எட்டாமல் ஆட்டம் இழந்துள்ளார்.
7 ) அதிக பட்சமான தொடர் நாயகன் விருதுகள் (மொத்தம் 14)

இது போன்று இவரின் சாதனைகள், தனி மனிதனாக அல்லாமால் ஒவ்வொரு இந்தியனும் தன் காலரை தூக்கி பெருமை பேசி கொள்ளும் படியானவை. 1983 ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை, முதல் முறையாக வென்று உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளில் தனெக்கென்று ஒரு முத்திரையை பதித்தது. ஆனால் கிரிக்கெட் துறையையே சார்ந்த சில பேர் அல்லது கிரிக்கெட் விளையாட்டை தங்கள் நரம்புகளில் புகுத்திய சில பேர்களின் பார்வை மட்டுமே இந்திய அணியின் பக்கம் இருந்தது. இன்று உலக அளவில் அதிகமாக பொருள் ஈட்டும் (Sponsorship) அணிகளில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது. இந்த மாற்றம் கண்டிப்பாக, மக்கள் தொகையின் காரணமாக விளம்பர யுக்திக்கு பெரும் நிறுவனங்கள் பயன் படுத்தி கொள்ளும் நுட்பம் எனினும், இந்தியா சில தருணங்களில் உலக நாடுகளை தன் கிரிக்கெட் வலையால் ஈர்த்தே வந்துள்ளது. கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களால் கொடுக்க முடியாத கவர்ச்சியினை  இந்திய அணிக்கு தொடக்கத்தில், கொடுத்ததில் "சச்சின் டெண்டுல்கர்" க்கு பெரும் பங்கு உள்ளது. இன்று டோனி, யுவராஜ் சிங், சேவாக் போன்ற பலர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரர்களாக இருந்தாலும், 10 வருடங்களுக்கு முன், சச்சின் ஒருவரை நம்பி மட்டுமே ஆட்டங்களும், ரசிகர்களும் இருந்ததை மறக்க முடியாது. இன்று கிராம புறங்களில் கூட கிரிக்கெட் ஒரு இன்றி அமையாத ஒரு அங்கம் ஆனதற்கு, அதன் மேலான ஈடு பாடு அதிகரித்ததற்கான காரணங்களில் இன்றியமையாதவர் "சச்சின்". இவ்வாறு இவரின் பெயரை கிட்டத்தட்ட எல்லோருமே பெருமையாக பேசி கொண்டிருக்கும் வேலையில், இவர் மராத்திய மண்ணிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே சொந்தமானவர் என்பது எல்லா இந்தியர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கை என்றே கருதுகிறேன். இதை இவரே, இவர் வாய் பட கூறின், எதிர்ப்பவரும் இருப்பார்களோ? இருக்கிறார்கள், மும்பை மண்ணின் (மும்பை எங்க சார் இருக்கு?) மைந்தன் ஷிவ் சேனா கட்சியின் தலைவர்.

"பால் தாக்ரே" - இந்து மதத்தினை மையமாக வைத்து முஸ்லிம்களை எதிர்த்து குரல் கொடுப்பவராக இருந்து, பின் மராத்தியினரின் நல்வாழ்வு(?) க்காக பாடுபட்டு (பாடுபடுத்தி) வரும் தலைவர். இது போன்ற அரசியல் வாதிகள் "நம் இந்தியா" என்ற ஒருமை பாட்டினை வளர்க்கும் இடத்தில் இருந்து கொண்டு, கீழ் தரமாக இந்தியாவையே பிளவாக்கும் செயல்களை செய்து வருவது வேதனை அளிக்கும் செயல். நாம் மொழிகளில் பிரிந்திருந்தாலும், இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆனால் இன்றைய அரசியல் வாதிகள், மக்களிடையே பிரிவினை உண்டாக்கி அதில் உணர்ச்சி வசமான வசனங்கள் பேசி, கேவலமான அரசியல் பிழைப்பு பிழைக்கிறார்கள். தமிழன் என்ற முறையில் "தமிழ்நாடு" குறித்த பெருமைகள், பண்பாடுகள்  என்று அதன் புகழ் பாடுவதில் தப்பில்லை. ஆனால் தமிழன், என்று எதற்கு எடுத்தாலும் நம்மை பிரித்து வைத்து சுகப்படுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவும், இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தொடர்பு உடைய ஒன்று. இதில் மலையாளம் பேசுபவர்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்றோ, தமிழ் பேசுபவனுக்கு கர்நாடகவில் இடம் இல்லை என்றோ, குஜராத்தி பேசுபனுக்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை என்றோ எவனும் சொல்லி விட முடியாது. நாம் எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியும் படியான சுதந்திரத்தை என்றோ பெற்று விட்டோம். இதில் எவனும், "தன்னுடையது" என்று பொதுவான எதையும் பிரிக்க முடியாது.

இன்றைய நிலையில், கருத்து சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். "வந்தே மாதரம்" என்ற பாடலையே புறக்கணிக்கும் படியான செயல்களை செய்யும் கீழ் நிலை அரசியல் தலை தூக்கி வருவதை ஆட்சியாளர்கள் (ம்ம்... செய்பவர்களே அவர்களாக இருந்தால்???) அடக்கி வைத்தே ஆக வேண்டும்.

"நான் மராத்தியன் என்பதை விட இந்தியன் என்பதில் அதிக பெருமை கொள்கிறேன்" என்ற சச்சின் டெண்டுல்கரின் சொற்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும், ஏன் ஒவ்வொரு மராத்தியனும் கூட பெருமை பட வேண்டிய ஒன்று. ஆனால், இது மராத்திய மக்களை புண்படுத்தும் படியான பேச்சு என்று "பால் தாக்கரே" வால் விமர்சிக்க பட்டிருப்பது கண்டிப்பாக வருத்தத்தை அளிக்கிறது. மேலும் "கிரிக்கெட்டை மட்டும் கவனித்து, அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் சச்சின் வராமால் இருப்பது நல்லது" என எச்சரிக்கை வேறு !!!.

எது அரசியல்? மராத்தியன், இந்தியன் அல்ல என்பது தான் இவர்களின் அரசியலா? அப்படியே இருந்தாலும், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது ஜன நாயக உரிமை. அப்படி இருக்க, அரசியல் விசயங்களில் சச்சின் வர கூடாது என்று சொல்வதே, ஒரு ஜன நாயக அத்துமீறல். அவர் அவர் கருத்துகளை, சொல்வது தான் கருத்து சுதந்திரம். இதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

கிரிக்கெட்டில் சச்சின் நிகழ்த்திய சாதனைகள் அவரின் உழைப்பின் மூலம் கிடைத்தவை. அந்த உழைப்பின் உபரி பலன்களை, வெறும் எதிர்ப்பதின் மூலம் பெற்று விட நினைக்காதே...

சச்சின் ரசிகன், என்ற முறையில், நான் ஏற்கனவே பெருமை பட்டிருக்கிறேன். இன்று சச்சின், ஒரு சிறந்த "இந்தியன்" என்ற முறையிலும் பெருமை படுகிறேன். நீங்களும் சிறு வட்டத்தில் சிக்காமல், முடிந்த வரை பரந்த மனப்பான்மையுடன் இந்தியன் என்றே மார் தட்டி கொள்ளுங்கள். வந்தே மாதரம்!!!

Wednesday, November 4, 2009

மரணத்திற்கு பிறகு ???


"மரணம்" - எல்லா உயிர்களும் அடைய விரும்பாவிடிலும் பெற்றே ஆக வேண்டிய முடிவு.

உண்மையில் மரணத்தின் பின் என்னதான் ஆகிறோம்? இந்த கேள்விக்கு கண்டிப்பாக "அறிவியல்" இடமிருந்து பதிலை எதிர்பார்ப்பது இயாலாத ஒன்று என்று நினைத்த நான், சில ஆன்மிக புத்தகங்களை உதவிக்கு நாடினேன். பல்சுவையான பதில்கள் எனக்கு கிடைக்க ஆரம்பித்தன.

கிறித்துவ மதம் இதற்கு சொர்க்கம் (Heaven), நரகம் (Hell) என்ற இரு பிரிவுகளை கை காட்டியது. பாவம் (Sin) செய்தவர்கள் நரகம் சென்று பாவத்திற்கு ஏற்ற தண்டனைகளை பெறுவதாகவும், சொர்க்கம், புண்ணியங்களின் பலன்களை ஏற்கும் இடமாகவும் காட்ட பட்டது. இறைவனின் அருள் பெற்றவர்கள் அழிவில்லா தன்மை (Immortality) அடைவதாகவும் (சில குறுப்பிட்ட பிரிவினர் மட்டும் இதை நம்புகின்றனர்) உள்ளது. சொர்கமும், நரகமும் மறு பிறப்புக்கு முதற்பட்ட நிலைகளென குறுப்பிட படுகிறது.

இஸ்லாமிய மதமும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துகளையே சொல்வதாக கருதுகிறேன். இங்கே சொர்க்கம், "ஜன்னா" (Jannah) என்றும், நரகம் "ஜஹனம்" (Jahannam) என்றும் பெயரிட பட்டுருக்கிறது."மாலிக்" என்ற நபர், நரகத்தை (Jannah) பாதுகாப்பதாக குர்ர்-ஆன் கூறுகிறது. இங்கு எரிந்து கொண்டு இருக்கும் நரகமும், மிக கடுமையான குளிருடன் கூடிய நரகமும் என, 2 விதமான நரகங்கள் கூறபடுகிறது. மிகவும் மோசமானவர்கள் குளிர் நரகத்துக்கு செல்வதாக நம்ப படுகிறது (ஜில்லுனு ஒரு நரகம்???).

அடுத்து, இந்து மதத்தை அலச முயன்றேன். இதற்கு "கருட புராணம்" உதவியாக இருக்கும் என முதலில் அந்நூலை படிக்க தொடங்கினேன். இந்நூல், கருட பகவானின் கேள்விகளுக்கு, மஹா விஷ்ணுவே நேரடியாக பதிலை அளிப்பதாக, வியாச மாமுனி அவர்களின் சீடர்களுக்கு உரைத்த புராணம் என அறிந்தேன். "அந்நியன்" படத்திற்கு பிறகு, கருட புராணத்தை பற்றி தெரியாதவர்களும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை கண்டிப்பாக பெற்றிருக்க கூடும், என்னை போல். இந்த புராணம், எவை பாவங்கள் என்றும் அதற்கு ஏற்ற தண்டனைகளையும் விளக்குவதாக உள்ளது. மேலும், எமதர்மன், சித்திர குப்தன், விசித்திர குப்தன், எம தூதர்கள், தேவ தூதர்கள் போன்ற சில கதாபாத்திரங்களையும் நமக்கு அறிமுக படுத்துகிறது. மேலும் எமன், சித்திர குப்தன், விசித்திர குப்தன் போன்ற ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி படுத்தும் வேள்விகள், தானங்கள் போன்றவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும் துர் மரணம் அடைந்த உயிர்கள், நரகத்தேயே அடையும் என்றும், புண்ணியம் செய்தவர்கள் தேவ தூதர்களால் அழைத்து செல்ல படுவார்கள் என்றும், பாவம் செய்தவர்கள் எம தூதர்களால் அடித்து இழுத்து செல்ல படுவதாகவும் படித்தேன். நரகத்தில் கொடுக்க படுவதாக சொல்லப்படும் தண்டனைகள், கண்டிப்பாக யாரையும் பயமுறுத்தி விட கூடியவைகளாக உள்ளன. உதாரணமாக, பாவம் செய்தவர்கள் கிட்ட தட்ட ஒரு வருடம் வரையிலும் எம லோகத்திற்கு இழுத்து செல்ல படுவதாகவும், "பிண்டம்" என அந்த உயிருக்கு படைக்க படும் உணவை உண்டு அதன் மூலம் சிறுது சிறிதாக உடலை அடைந்து பின் எம லோகத்தை அடைவதாகவும், அதன் பின் அந்த கட்டுண்ட உடலுக்கே தண்டனைகள் கொடுப்பதாகவும் படித்தேன். இழுத்து செல்லும் வழி எங்கும், சில நரகங்களுக்கு உள்ளே அனுமதித்து அங்கே அவர்கள் சாப்பிட நேரம் ஒதுக்க படுவதாகவும், எம லோகத்தின் நுழைவு இடத்தில மிகவும் கொடிய துர்-நாற்றமுடைய ஆறு ஒன்றை கடக்க சொல்வாதகவும் படித்தேன். அதன் பின்னரே அவர்களின் உண்மையான தண்டனைகள் அவனுக்கு வழங்க படுகிறது. இவ்வாறு கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் என்னை ஆச்சர்யத்துக்கு உண்டாக்கியது, சொல்ல போனால் அதிர்ச்சிக்கு உண்டாக்கியது. இவை கற்பனைகளே என கொண்டாலும், இத்தனை கற்பனைகளுக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.

புத்த மதமும், "எமன்" எனும் அரசனை கொண்டு மொத்தம் 10 அரசர்களால் "நரகம்" ஆள படுவதாக கூறுகிறது. மேலும் தேவர்கள், அசுரர்கள் போன்ற கருத்துகளும் இதில் உண்டு. எனவே புத்த மதமும் இந்து மதத்தின் சாரத்தேயே கூறுவதாக எடுத்து கொள்ளலாம்.

விவேகானந்தர், மரணத்தினை வித்தியாசமாக அலச முயன்றிருப்பதாக, அவரின் "மரணுத்துக்கு பின்னால்" என்ற புத்தகம் மூலம் உணர்ந்தேன். அவர் உடலையே மையாமாக கொண்ட மதங்களையும் (எகிப்து பகுதிகளில் இன்றளவும் உடல் உள்ளவரை மட்டுமே உயிர் இருக்கும் என்ற கருத்தினை மையமாக கொண்டு "Mummy" எனும் உடலை பாதுகாக்கும் முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளனர்), உயிரையே (ஆத்மாவை) மையமாக கொண்ட மதங்களையும் அவர் ஆராய்கிறார். அவர் உடலை மையமாக கொண்ட மதங்கள் கூறும் விசயங்களில் உடன்பாடு இல்லாத நிலையை வெளிபடுத்தியும், மோட்சம் (முக்தி) என்ற ஒரு நிலைக்கே எல்லா உயிர்களும் பாடு படுகின்றன என்றும் அதில் விளக்கி உள்ளார். மேலும் கடவுளை அடையும், அதாவது கடவுளுடன் ஒன்றிணைதல் என்ற நிலை யோகங்களின் மூலம் பெறலாம் என்றும் கூறுகிறார். இதற்கு எல்லாம் அடித்தளமான  "பகவத் கீதை" யை அறிய அதற்குள் நுழைய ஆரம்பித்தேன்.

அங்கு ஆத்மாவுக்கு அழிவே இல்லை. அது என்று முக்தி நிலையை அடைகிறதோ அப்போது தான், மறு பிறவியில் இருந்து விடுதலை அடைகிறது. அதுவே ஒவ்வொரு உயிரின் இறுதி கட்ட குறிக்கோள் என்றும், மனித பிறவியே எல்லா பிறவியை விடவும் உயர்ந்தது எனவும் அறிவுரை படுத்தபட்டேன். முக்தி நிலை, இறைவனில் இரண்டற கலக்கும் நிலை எனும் கருத்தை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னரே பகவான் கிருஷ்ணர் கூறியிருப்பதையும், இங்கே கூறப்பட்ட விஷயங்கள் தான் மெருகேற்ற பட்டு பிற மதங்களில் (மற்ற மகா புருஷர்களால்) கூற பட்டிருக்கலாம் என எண்ண தோன்றியது. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராம கிருஷ்ண பரமஹம்சர் கூட இதே கருத்துகளையே செப்பனிடுவதாக தோன்றியது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே அடைய தகுந்த உயர் நிலை என்பதே எல்லா மதத்தின் கருத்தாக எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணர் "நானே அதை அடைய ஒரே வழி" என்றும் கிறிஸ்துவும் "நானே உன் பாவங்களை போக்கி முழு நிலை அளிப்பேன்" என்றும், புத்தர், மகாவீரர், நபிகள் நாயகம் என எல்லோரும் இதையே (அடிப்படை) கூறுவதாக தோன்றியது.

இவ்வாறு சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு, பிறப்பும் இறப்பும் எதை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என கருத்துகளை மையமிட முயன்றேன். இதில் மையமாக கீழ் தந்த கருத்துகளை பார்க்கிறேன்.

"ஆத்மா"என்றும் மாசு படாத, அதாவது கரை படாத மற்றும் ஆக்கமும் அழிவும் இல்லாத நிலை. செய்த பாவங்கள், புண்ணியங்களை பொருத்து "ஆத்மா" அதன் அடுத்த உடலை தேர்ந்து எடுக்கிறது. அல்லது பிறவி எனும் பாவத்தில் இருந்து விடுபடுகிறது."ஆசை"யே அழிவுக்கு காரணம். ஆசையை கட்டுப்படுத்தியவன் எதற்கும் அடிமை அல்ல. அவன்
விரைவிலேயே பிறவி கடலின், கரையை காண்கிறான்.

இந்த குறுகிய கால ஆராய்ச்சிகள், இந்த தேடலில் கண்டிப்பாக முழு பதிலை தராது என உணர்ந்தேன். என் பார்வையில் மரணம் கூட ஒரு முடிவு அல்ல என்பது போன்ற எண்ணம் சற்றே தோன்றலாயிற்று. தற்கொலை செய்து கொள்பவர்கள், கண்டிப்பாக ஒரு இழிவான நிலையை மரணத்துக்கு அடுத்து பெறுவார்கள் என கிட்டத்தட்ட எல்லா மதமும் சொல்கின்றன. மரணம் எப்படி ஒரு பிரிவை, உறவினர்களுக்கு தருகிறதோ, அதே போன்று உடலை பிரிந்த ஆத்மாவும், பிரிவினையை உணருமா? இதற்கு இந்து மதத்தின் புனித நூலான "பகவத் கீதை", ஆத்மா எந்த பந்தங்களிலும் சிக்காது, ஆனால் பந்தங்களே இல்லாத வாழ்க்கை வாழும் வரை, விடுதலை அடைவதில்லை, என்பது போன்ற கருத்துகளை கொடுக்கிறது. உடல் ஒரு சட்டை க்கு ஒப்பிடப்படுகிறது. உயிர் மறு பிறவியின் மூலம் மற்றொரு சட்டையை மாட்டி கொள்கிறது. சட்டை கிழிந்ததை உடலுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கூற முடியாது. அது போல் உடல் பிரிந்ததை உயிரின் இழப்பு என்று கூற முடியாது என்பது தான் மைய கருத்து.

இது போன்ற ஆன்ம ரீதியான படிப்புகள், மனிதனை கண்டிப்பாக தவறுகள் செய்யும் போது எச்சரிக்கும் அற்புதமான நண்பர்கள். வாழ்க்கை, இறந்ததும் முடிந்து விடுகின்றது, எனவே இருக்கும் வரை "தவறுகள்" செய்தாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் படியான நிலை, என்னை சற்று உறுத்தவே செய்தது.

எல்லா உயிர்களுமே ஒரே மாதிரியான ஆத்மாக்களை கொண்டதானால், "வைரஸ்" போன்ற  நுண்ணுயிரிகளும் மனிதனுக்கு ஒப்பிட தகுந்த உயிர்களே. கருட புராணம், 3 வகையான உயிர்களை பற்றி குறிப்பிடுகிறது. "குட்டிகள் ஈன்பவை", "முட்டைகள் மூலம் உயிர்ப்பவை", "வியர்வைகள் மூலம் (அல்லது இறந்த பொருளின் மூலம்) ஜனிப்பவை" என்பவை அவை மூன்றும். இதில் கிருமிகள் மூன்றாம் வகையை சேர்ந்தவையாக கொள்ளலாம். எனவே தன் தகுதிக்கு (பாவ, புண்ணியங்களுக்கு) ஏற்ப, ஆத்மா தேர்ந்தெடுத்த ஜனனங்கள் தான் எல்லாம் என எடுத்து கொள்ளலாம்.

இந்த சிறிய ஆராய்ச்சி எனக்கு மட்டும் அல்ல, படிக்கும் உங்களிலும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!!!. "பணம்", "பதவி", "புகழ்", "பங்களா", "மது", "மாது" என ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்ட நம்மை, "மரணம்" தன் சாட்டையால் அடித்து "நிலையானதை நீ தேடவில்லை" என்று கூறுகிறது.

"மரணம்" - எல்லோருக்கும் உண்டு. ஏன், பிரம்ம பகவானே மரணத்தை உடையவன் என்று வேதங்கள் கூறுகின்றன. மரணத்திற்கு அடுத்து ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பியாவது, தவறுகள் செய்வதை குறைப்போம். பிற உயிர்களுக்கும் முடிந்த வரை நன்மைகள் செய்து அதில் ஆத்மசுகம் காண்போம். (Atleast Try பண்ணுவோம் பாஸ்)...

Search This Blog