சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்... கிரிக்கெட் உலகின் முடி சூட மன்னனாக திகழும் இவர், நிகழ்த்தி இருக்கும் கிரிக்கெட் சார்ந்த சாதனைகள் கிட்டத்தட்ட 70 க்கும் மேலாக நீண்டு கொண்டே செல்கிறது. அவற்றில் முக்கியமான சில உங்களின் பார்வைக்கு கீழே...
1 ) அதிக பட்சமான ஒரு நாள் ஆட்ட ஓட்டங்களை எடுத்தவர் (தற்போதைய கணக்கின் படி 17178 ஓட்டங்கள்)
2 ) அதிக பட்சமான ஒரு நாள் ஆட்டத்திற்கான சதங்களை எடுத்தவர் (இன்று வரை 45 சதங்கள்)
3 ) அதிக பட்சமான ஆட்ட நாயகன் விருது வாங்கியவர்
4 ) அதிக பட்சமாக 10 வருடங்களுக்கும் மேல் உலக தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்.
5 ) டெஸ்ட் போட்டிகளில் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தவர் (தற்போதைய கணக்கில் 12777 ஓட்டங்கள்)
6 ) அதிக பட்சமாக ஒரு நாள் ஆட்டங்களில் 90 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சதம் எடுக்காமல் ஆட்டமிழந்தவர் (17 முறை 90 ஓட்டங்களுக்கு மேல் பெற்று ஆனால் சதத்தை எட்டாமல் ஆட்டம் இழந்துள்ளார்.
7 ) அதிக பட்சமான தொடர் நாயகன் விருதுகள் (மொத்தம் 14)
இது போன்று இவரின் சாதனைகள், தனி மனிதனாக அல்லாமால் ஒவ்வொரு இந்தியனும் தன் காலரை தூக்கி பெருமை பேசி கொள்ளும் படியானவை. 1983 ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை, முதல் முறையாக வென்று உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளில் தனெக்கென்று ஒரு முத்திரையை பதித்தது. ஆனால் கிரிக்கெட் துறையையே சார்ந்த சில பேர் அல்லது கிரிக்கெட் விளையாட்டை தங்கள் நரம்புகளில் புகுத்திய சில பேர்களின் பார்வை மட்டுமே இந்திய அணியின் பக்கம் இருந்தது. இன்று உலக அளவில் அதிகமாக பொருள் ஈட்டும் (Sponsorship) அணிகளில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது. இந்த மாற்றம் கண்டிப்பாக, மக்கள் தொகையின் காரணமாக விளம்பர யுக்திக்கு பெரும் நிறுவனங்கள் பயன் படுத்தி கொள்ளும் நுட்பம் எனினும், இந்தியா சில தருணங்களில் உலக நாடுகளை தன் கிரிக்கெட் வலையால் ஈர்த்தே வந்துள்ளது. கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களால் கொடுக்க முடியாத கவர்ச்சியினை இந்திய அணிக்கு தொடக்கத்தில், கொடுத்ததில் "சச்சின் டெண்டுல்கர்" க்கு பெரும் பங்கு உள்ளது. இன்று டோனி, யுவராஜ் சிங், சேவாக் போன்ற பலர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரர்களாக இருந்தாலும், 10 வருடங்களுக்கு முன், சச்சின் ஒருவரை நம்பி மட்டுமே ஆட்டங்களும், ரசிகர்களும் இருந்ததை மறக்க முடியாது. இன்று கிராம புறங்களில் கூட கிரிக்கெட் ஒரு இன்றி அமையாத ஒரு அங்கம் ஆனதற்கு, அதன் மேலான ஈடு பாடு அதிகரித்ததற்கான காரணங்களில் இன்றியமையாதவர் "சச்சின்". இவ்வாறு இவரின் பெயரை கிட்டத்தட்ட எல்லோருமே பெருமையாக பேசி கொண்டிருக்கும் வேலையில், இவர் மராத்திய மண்ணிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே சொந்தமானவர் என்பது எல்லா இந்தியர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கை என்றே கருதுகிறேன். இதை இவரே, இவர் வாய் பட கூறின், எதிர்ப்பவரும் இருப்பார்களோ? இருக்கிறார்கள், மும்பை மண்ணின் (மும்பை எங்க சார் இருக்கு?) மைந்தன் ஷிவ் சேனா கட்சியின் தலைவர்.
"பால் தாக்ரே" - இந்து மதத்தினை மையமாக வைத்து முஸ்லிம்களை எதிர்த்து குரல் கொடுப்பவராக இருந்து, பின் மராத்தியினரின் நல்வாழ்வு(?) க்காக பாடுபட்டு (பாடுபடுத்தி) வரும் தலைவர். இது போன்ற அரசியல் வாதிகள் "நம் இந்தியா" என்ற ஒருமை பாட்டினை வளர்க்கும் இடத்தில் இருந்து கொண்டு, கீழ் தரமாக இந்தியாவையே பிளவாக்கும் செயல்களை செய்து வருவது வேதனை அளிக்கும் செயல். நாம் மொழிகளில் பிரிந்திருந்தாலும், இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆனால் இன்றைய அரசியல் வாதிகள், மக்களிடையே பிரிவினை உண்டாக்கி அதில் உணர்ச்சி வசமான வசனங்கள் பேசி, கேவலமான அரசியல் பிழைப்பு பிழைக்கிறார்கள். தமிழன் என்ற முறையில் "தமிழ்நாடு" குறித்த பெருமைகள், பண்பாடுகள் என்று அதன் புகழ் பாடுவதில் தப்பில்லை. ஆனால் தமிழன், என்று எதற்கு எடுத்தாலும் நம்மை பிரித்து வைத்து சுகப்படுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவும், இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தொடர்பு உடைய ஒன்று. இதில் மலையாளம் பேசுபவர்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்றோ, தமிழ் பேசுபவனுக்கு கர்நாடகவில் இடம் இல்லை என்றோ, குஜராத்தி பேசுபனுக்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை என்றோ எவனும் சொல்லி விட முடியாது. நாம் எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியும் படியான சுதந்திரத்தை என்றோ பெற்று விட்டோம். இதில் எவனும், "தன்னுடையது" என்று பொதுவான எதையும் பிரிக்க முடியாது.
இன்றைய நிலையில், கருத்து சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். "வந்தே மாதரம்" என்ற பாடலையே புறக்கணிக்கும் படியான செயல்களை செய்யும் கீழ் நிலை அரசியல் தலை தூக்கி வருவதை ஆட்சியாளர்கள் (ம்ம்... செய்பவர்களே அவர்களாக இருந்தால்???) அடக்கி வைத்தே ஆக வேண்டும்.
"நான் மராத்தியன் என்பதை விட இந்தியன் என்பதில் அதிக பெருமை கொள்கிறேன்" என்ற சச்சின் டெண்டுல்கரின் சொற்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும், ஏன் ஒவ்வொரு மராத்தியனும் கூட பெருமை பட வேண்டிய ஒன்று. ஆனால், இது மராத்திய மக்களை புண்படுத்தும் படியான பேச்சு என்று "பால் தாக்கரே" வால் விமர்சிக்க பட்டிருப்பது கண்டிப்பாக வருத்தத்தை அளிக்கிறது. மேலும் "கிரிக்கெட்டை மட்டும் கவனித்து, அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் சச்சின் வராமால் இருப்பது நல்லது" என எச்சரிக்கை வேறு !!!.
எது அரசியல்? மராத்தியன், இந்தியன் அல்ல என்பது தான் இவர்களின் அரசியலா? அப்படியே இருந்தாலும், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது ஜன நாயக உரிமை. அப்படி இருக்க, அரசியல் விசயங்களில் சச்சின் வர கூடாது என்று சொல்வதே, ஒரு ஜன நாயக அத்துமீறல். அவர் அவர் கருத்துகளை, சொல்வது தான் கருத்து சுதந்திரம். இதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
கிரிக்கெட்டில் சச்சின் நிகழ்த்திய சாதனைகள் அவரின் உழைப்பின் மூலம் கிடைத்தவை. அந்த உழைப்பின் உபரி பலன்களை, வெறும் எதிர்ப்பதின் மூலம் பெற்று விட நினைக்காதே...
சச்சின் ரசிகன், என்ற முறையில், நான் ஏற்கனவே பெருமை பட்டிருக்கிறேன். இன்று சச்சின், ஒரு சிறந்த "இந்தியன்" என்ற முறையிலும் பெருமை படுகிறேன். நீங்களும் சிறு வட்டத்தில் சிக்காமல், முடிந்த வரை பரந்த மனப்பான்மையுடன் இந்தியன் என்றே மார் தட்டி கொள்ளுங்கள். வந்தே மாதரம்!!!